ரூ 26.95 லட்சம் ஆரம்ப விலையில் இந்தியாவில் வெளியிடப்பட்டது புதிய மஹிந்திரா அல்டுரஸ் G4

மஹிந்திரா நிறுவனம் இறுதியாக மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அல்டுரஸ் G4 பிரீமியம் SUV மாடலை ரூ 26.95 லட்சம் ஆரம்ப விலையில் இந்தியாவில் வெளியிட்டுள்ளது. இந்த மாடல் 4x2 மற்றும் 4x4 என இரண்டு வேரியன்ட்டுகளில் மட்டும் முறையே ரூ 26.95 லட்சம் மற்றும் ரூ 29.95 லட்சம் ஷோரூம் விலையில் வெளியிடப்பட்டுள்ளது. புதிய தலைமுறை சாங் யாங் ரெக்ஸ்டன் மாடலின் ரீபேட்ச் செய்யப்பட்ட மாடல் தான் இந்த மஹிந்திரா அல்டுரஸ் G4 ஆகும். மஹிந்திரா நிறுவனம் முதலில் இந்த மாடலை 2018 ஆம் ஆண்டு டெல்லி வாகன கண்காட்சியில் அறிமுகப்படுத்தியது.

இந்த மாடலில் சேமிப்பு வசதியுடன் கூடிய 8-way எலெக்ட்ரிக் பவர்டு ஓட்டுநர் இருக்கை, டியூவல் சோன் கிளைமேட் கன்ட்ரோல், ஒன்பது காற்றுப்பை, 3D 360 டிகிரி பின்புற பார்க்கிங் கேமரா என ஏராளமான வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் வெளிப்புற தோற்றம் ஒரு கம்பீரமான SUV போன்ற தோற்றத்தை தருகிறது என்பது அனைவரும் அறிந்ததே. மேலும் இந்த மாடலில் ஹில் டீசென்ட் கன்ட்ரோல், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், ஆக்டிவ் ரோல் ஓவர் ப்ரொடெக்ஷன், எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், எலக்ட்ரிக் சன் ரூப் என ஏராளமான பாதுகாப்பு வசதிகள் இந்த மாடலில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மடலுக்கென மஹிந்திரா ஷோரூம்களிலேயே பிரத்தியேக பகுதி மற்றும் பிரத்தியேக மேலாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், Purple Club+ எனும் பிரத்தியேக லாயல்டி ப்ரோக்ராமும் தொடங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாடலும் மற்ற மஹிந்திரா மாடல்கள் போலவே பாடி-ஆன்-பிரேம் எனும் முறையில் தான் தயாரிக்கப்பட்டுள்ளது. முந்தய சாங் யாங் ரெக்ஸ்டன் மாடலுடன் ஒப்பிடும் போது இந்த மாடலின் கட்டமைப்பு அதிக உறுதித்தன்மை கொண்டதாகவும் 50 கிலோ கிராம் வரை குறைவான எடை கொண்டதாகவும் இருக்கும். இந்த மாடல் அதிக எரிபொருள் சிக்கனம் கொண்ட மாடலாகவும் சிறந்த ஏரோ டைனமிக் கொண்டதாகவும் இருக்கும். இந்த மாடலில் 2.2 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 178 Bhp திறனும் 420Nm இழுவைத்திறனும் கொண்டது. மேலும் இந்த மாடல் ஆல் வீல் டிரைவ் சிஸ்டத்துடனும் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் ஆட்டோமேட்டிக் கியர் பாக்சுடனும் கிடைக்கும். 

மஹிந்திரா அல்டுரஸ் G4 மாடல் டொயோட்டா பார்ச்சுனர் மற்றும் போர்டு எண்டவர் போன்ற பிரீமியம் SUV மாடல்களுக்கு போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த மாடல் மஹிந்திரா நிறுவனத்தின் அதிக விலை கொண்ட மாடலாக நிலைநிறுத்தப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மௌவலின் ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.